சரக்கு வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

கிருஷ்ணகிரியில் சரக்கு வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-05-20 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மோட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சோமார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்று கொண்டிருந்தார். இவருடன் வேட்டியம்பட்டியைச் சேர்ந்த அரவிந்தன் (18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அந்த நேரம் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிள் சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேசும், அரவிந்தனும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். அரவிந்தன் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்