ஆண்டிப்பட்டி அருகே கார்-வேன் நேருக்குநேர் மோதல்: பெண்கள் உள்பட 4 பேர் பலி

ஆண்டிப்பட்டி அருகே கார்-வேன் நேருக்குநேர் மோதலில் பெண்கள் உள்பட 4 பேர் பலியாயினர்.

Update: 2018-05-20 23:30 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், தேனி அல்லிநகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு வேனில் வந்தனர். விழா முடிந்ததும் நேற்று மதியம் 12 மணியளவில் மீண்டும் அவர்கள், எம்.கல்லுப்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இதேபோல், மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி கார் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. அந்த காரை, துரைப்பாண்டி (வயது 37) என்பவர் ஓட்டினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள திம்மரசநாயக்கனூர் கணவாய் மலைப்பாதையில் கார் சென்றபோது, திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

பின்னர் அல்லிநகரத்தில் இருந்து எம்.கல்லுப்பட்டி நோக்கி சென்ற வேன் மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. காரின் மேற்கூரை பறந்தது. வேனும் பலத்த சேதம் அடைந்தது. இதுமட்டுமின்றி கார், வேனில் வந்தவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த க.விலக்கு அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (42), சுசிதா (19), வேனில் பயணம் செய்த எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ராமர் (21), செல்லமுத்து (48) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (40), ரமேஷ்குமார் (22), காளஸ்வரன் (35), மல்லிகா (32), பாப்பா (45), பாண்டியம்மாள் (30), சுந்தரம்மாள் (50), ஜோதி (36) உள்பட 15 பேரும், காரில் பயணம் செய்த ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா (27), லோகமணி (71), மீனாட்சி (58), ஒச்சம்மாள் (60), துரைச்சாமி, அவருடைய மனைவி சுசரிதா (30) ஆகியோர் உள்பட 12 பேரும் என மொத்தம் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த துரைப்பாண்டி, அவருடைய மனைவி சுசரிதா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்