நோயாளியை பார்க்க அனுமதிக்காததால் காவலாளிக்கு அடி, உதை: வாலிபருக்கு வலைவீச்சு

நோயாளியை பார்க்க அனுமதிக்காததால் காவலாளியை அடித்து, உதைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-05-20 22:43 GMT
அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளியை பார்க்க அனுமதிக்காததால் காவலாளியை அடித்து உதைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூரை சேர்ந்தவர் ரேணுகா (வயது 24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் பணிபுரிந்து வரும் ரேணுகாவின் உறவினர் சதீஷ் (வயது 20) அவரை காண மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவசர சிகிச்சை பிரிவில் காவலாளியாக இருந்த அமரேசன் என்பவரிடம் சதீஷ், ‘தான் ரேணுகாவின் உறவினர் என்றும், அவரை பார்க்க உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

அதற்கு அமரேசன், அவசர சிகிச்சை பிரிவில் ஏற்கனவே நிறைய பேர் உள்ளனர். அவர்கள் வந்த பின்னர் நீ செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சதீஷ் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் சரமாரியாக அமரேசனை அடித்து, உதைத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து அமரேசன் வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்