சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை-பணம் திருட்டு

சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 40 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2018-05-26 23:47 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கம், சந்தனாம்மாள் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 60). ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தது.

பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

சீனிவாசன், தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்று உள்ளனர்.

இதுபற்றி சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்