கிராம தபால் ஊழியர்கள் 9-வது நாளாக வேலைநிறுத்தம் பணிகள் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் கிராம தபால் ஊழியர்கள் 9-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2018-05-30 23:00 GMT
தஞ்சாவூர்,

கிராமிய அஞ்சல்ஊழியர்களுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 7-வது ஊதியக்குழுவிற்காக கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, அவரும் அரசிற்கு பரிந்துரை வழங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. ஆனால் அந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத்தக் கோரி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 9-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் தஞ்சை ரெயிலடி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் மருதையன், பொருளாளர் கருப்புசாமி, தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் அரசு, செயலாளர் முனியகுமரன், பொருளாளர் பால்ராஜ், கிராமிய தபால் ஊழியர்கள் சங்க தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் தசரதன், பொருளாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை கோட்டத்தில் உள்ள தஞ்சை, பாபநாசம், மன்னார்குடி பகுதிகளை உள்ளடக்கி 235 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இந்த தபால் நிலையங்களை சேர்ந்த 570 ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிளை தபால் நிலையங்கள் செயல்படவில்லை. இந்த பகுதிகளில் தபால் பட்டுவாடா உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்