‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை: திருச்சி மாணவி சுபஸ்ரீ உடல் தகனம்

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி மாணவி சுபஸ்ரீ உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.இதில் கிராம மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-06-07 23:15 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சியை அடுத்து நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47).இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கண்டோன்மெண்ட் கிளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (35). இந்த தம்பதியின் மகள் சுபஸ்ரீ (17), மகன் மிதுன் (13). இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். சுபஸ்ரீ பிளஸ்-2 படித்து முடித்து 907 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய இவர் நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் 24 மதிப்பெண்களே எடுத்து தேர்ச்சி பெறாததால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த சுபஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் உடலை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். பிரேத பரிசோதனை காலை 9.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 10.50 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவடைந்து சுபஸ்ரீயின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தாய், தந்தை இருவரும் தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் மனோகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க செயலாளர் ராம்குமார் தலைமையில் கட்சியினர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தே.மு.தி.க செயலாளர் வி.பி.தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, இந்திய ஜனநாயக திருச்சி மாவட்ட செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருணன் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுபஸ்ரீயின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதற்கிடையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகளை இழந்து தவித்த தந்தை கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து சுபஸ்ரீ உடல் தகனம் செய்வதற்காக ஓயாமாரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவி உடல் தகனம் நிகழ்ச்சியில் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்களும் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஓயாமாரி மின்மயானம் வரை 2 அரசு பஸ்கள் இலவசமாக இயக்கப்பட்டன. இந்த பஸ்சில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த பலர் மயானத்திற்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, நேற்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சுபஸ்ரீ வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியின் தந்தை கண்ணன், தாயார் செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாணவி சுபஸ்ரீ உருவப்படத்துக்கு கே.என்.நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.

மேலும் செய்திகள்