மின்சாரம் தாக்கி பெண் பலியான வழக்கில் 5 பேர் மீது வழக்கு

தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பெண் பலியான வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2018-06-07 22:30 GMT
ஊத்துக்கோட்டை,

மின்சாரம் தாக்கி பெண் பலியான வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் தன்னுடைய வயலில் நாற்று நடவு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள கண்ணாவரம் பகுதியில் இருந்து 25 பெண் தொழிலாளர்களை அழைத்து வந்தார்.

இந்த நிலையில் சாய்ந்தபடி நின்ற மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசியதில் வேலை செய்து கொண்டிருந்த முனியம்மாள் (வயது 50) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் முனியம்மாள் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்