மண்டியாவில் காலா படம் திரையிடப்படவில்லை: ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்கள் எரிப்பு

மண்டியாவில் நேற்று காலா படம் திரையிடப்படவில்லை, ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-06-07 23:00 GMT

மண்டியா,

மண்டியாவில் நேற்று காலா படம் திரையிடப்படவில்லை, ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

படம் வெளியிட தடை

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அவர் நடித்த காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்புகள், கர்நாடக வர்த்தக சபையிடம் வலியுறுத்தின. இதனை தொடர்ந்து காலா படத்தை வெளியிட கர்நாடக வர்த்தக சபை தடை விதித்தது.

ஆனாலும் திட்டமிட்டப்படி நேற்று கர்நாடகத்தில் காலா திரைப்படம் வெளியானது. முன்னதாக காலா படம் வெளியிடும் திரையரங்குகள் முன்பு கன்னட அமைப்பினர் கூடி, காலா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

உருவப்படங்கள் எரிப்பு

இந்த நிலையில் மண்டியாவில் உள்ள திரையரங்குகளில், கன்னட அமைப்பினர் கேட்டு கொண்டதன் பேரில் காலா படம் திரையிடப்படவில்லை. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த், கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட வேண்டும் என்று ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக பேசிய பிரகாஷ்ராஜ் ஆகியோரை கண்டித்து பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜிக்கு எதிராக கன்னட அமைப்பினர் கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த சந்தர்ப்பத்தில் சிலர் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்களுக்கு தீ வைத்து எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிகாட்டினர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மண்டியா டவுனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்