சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

Update: 2018-06-07 22:01 GMT
கோவை,

இதன்படி கோவை தேவாங்கர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமை தாங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றினார்.

இதில் மாவட்ட கல்வி அதிகாரி கீதா, கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறியதாவது.

மக்கள் தொகை அதிகரிப்பு, வாகன பெருக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடுமுழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் காலநிலை மாற்றங்கள் உருவாகி பருவ மழை சரியாக பெய்யாமல் பொய்த்து போகின்றது.

இதனை போக்கி மரங்களை வளர்த்து மழை வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுக்கு மரங்களின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 297 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து மரங்களாக உருவாக்க அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்