மந்திரி பதவி கொடுப்பதில் பரமேஸ்வர் தன்னிச்சையாக செயல்படுகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

மந்திரி பதவி கொடுப்பதில் பரமேஸ்வர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகர் குற்றம்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2018-06-07 22:15 GMT

கோலார் தங்கவயல்,

மந்திரி பதவி கொடுப்பதில் பரமேஸ்வர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகர் குற்றம்சாட்டு கூறியுள்ளார்.

மந்திரி பதவி கிடைக்கவில்லை

கர்நாடக சட்டசபை தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், டாக்டர் சுதாகர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2013–ம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி இருந்தார். 2 தடவை எம்.எல்.ஏ.வானதால் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சுதாகர் எதிர்பார்த்து இருந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் வெளியான மந்திரி பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.

பரமேஸ்வர் மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில் சிக்பள்ளாப்பூரில் சுதாகர் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மந்திரி பதவி கொடுப்பதில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்–மந்திரியுமான பரமேஸ்வர், கட்சி மேலிடத்தின் விருப்பத்திற்கு எதிராகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருகிறார். அவர் திறமையான இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுப்பதில் தவறிவிட்டார்.

இதன் மூலம் பரமேஸ்வர் இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். எனக்கு மந்திரி பதவி கிடைக்காததற்கு ஏன்? என்பது பரமேஸ்வருக்கு மட்டும் தான் தெரியும். அவர் தனது விருப்பபடி செயல்படுகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மீறிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதரவாளர்கள் போராட்டம்

இந்த நிலையில் சுதாகர் எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கொடுக்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 2–வது நாளாக சிக்பள்ளாப்பூர் டவுனில் நேற்றும் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பரமேஸ்வருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்