அனுமதியின்றி அள்ளியபோது மணல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

குஜிலியம்பாறை அருகே, அனுமதியின்றி அள்ளியபோது, மணல் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார். அவருடைய உடலை போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் எரித்தனர்.

Update: 2018-06-07 23:38 GMT
குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை ஒன்றியம் தி.கூடலூரில் உள்ள பூவாலம்மன் கோவில் அருகே வரட்டாற்று ஓடை செல்கிறது. இந்த ஓடையில் உள்ள தடுப்பணை அருகே கரை பகுதியில் மணல் திட்டுகள் அடுக்கடுக்காக படிந்துள்ளன. இங்கு அனுமதியின்றி அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் கூலிக்கு ஆட்களை வைத்து, இரவு நேரங்களில் டிராக்டர், லாரிகள் மூலம் மணல் அள்ளி செல்கின்ற னர்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவில், அங்குள்ள வரட்டாற்று ஓடையில் மர்ம நபர்கள் சிலர், கரையை குடைந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேல் பகுதியில் உள்ள மணல் திட்டு சரிந்து கீழே விழுந்தது. அப் போது அங்கு மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பால்வார் பட்டியை சேர்ந்த தொழிலாளி பொம்முராஜ் (வயது 40) என்பவர் மீது மணல் சரிந்து விழுந்து அமுக்கியது.

இதையடுத்து அவருடன் மணல் அள்ளிக் கொண்டி ருந்தவர்கள் அவரை மீட்டனர். இருப்பினும் அவர் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்ததும் அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த மற்றவர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் உதவி யுடன் இரவோடு, இரவாக போலீசுக்கு தெரியாமல் பால் வார்பட்டியில் உள்ள மயானத் தில் உடலை எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் நேற்று காலையில் தி.கூடலூர் ஊராட்சி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பொம்முராஜுக்கு மனைவி யும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘நான் தற்போது தூத்துக்குடியில் உள்ளேன். இதுகுறித்து எனக்கு தகவல் வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குஜிலியம்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்து விசாரிக்க கூறியுள்ளேன். அனுமதியின்றி மணல் அள்ளும்போது இறந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்