வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-08 22:30 GMT

குண்டடம்,

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் 2–வது நாளாக தாராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனைகளை வரைமுறை செய்ததற்கான ஆணைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர், ‘அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறை செய்ய அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எளிதாக்கப்பட்டு, கட்டணங்கள் குறைக்கப்பட்டு திருத்திய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வருகிற நவம்பர் மாதம் 3–ந்தேதி வரை அனுமதியற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்திக்கொள்ளலாம்.’ என்று கூறினார்.

இந்த சிறப்பு முகாமில், தாராபுரம் நகராட்சி மற்றும் தாராபுரம், குண்டடம், மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள், மூலனூர், குளத்துப்பாளையம், ருத்ராவதி, கன்னிவாடி ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, விண்ணப்பித்தனர்.

முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னாராமசாமி, உதவிஆணையர்(கலால்) சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், உதவிஇயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) முத்துக்குமார், தாராபுரம் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், தாராபுரம் தாசில்தார் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்