மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளி திடீர் சாவு

மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கைதி திடீரென இறந்தார்.

Update: 2018-06-08 23:15 GMT
கடத்தூர், 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நாகம்மா. இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 14-1-2017 அன்று இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவண்ணாவை கைது செய்தார்கள்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றம் சுமத்தப்பட்ட பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு பசுவண்ணாவை கைது செய்ய பவானிசாகர் போலீசாருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்பேரில் போலீசார் பசுவண்ணாவை வலைவீசி தேடி வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை சிறையில் இருந்த போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுவண்ணா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்