மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மெக்கானிக் பரிதாப சாவு

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-06-08 22:36 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அஞ்சாலம் கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா. இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 30). இவர் சூளகிரியில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாது என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை மஞ்சுநாத் தனது நண்பர் ராமுவுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்றார். அலகுபாவி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர் ராமு ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில், மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராமுவை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்