சென்னை விமான நிலையத்தில் கவுகாத்தி விமானம் ரத்து; பயணிகள் வாக்குவாதம்
கவுகாத்திக்கு தனியார் விமானம் செல்ல இருந்தது. ஆனால் திடீரென அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று மாலை கவுகாத்திக்கு தனியார் விமானம் செல்ல இருந்தது. அதில் செல்வதற்காக 265 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு காத்திருந்தனர்.
ஆனால் திடீரென அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் தனியார் விமான நிறுவன மையத்தை முற்றுகையிட்டு, விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். பின்னர் அவசரமாக செல்ல இருந்தவர்களை மட்டும் வேறு விமானங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இது போல் மும்பை, பெங்களூருக்கு செல்ல இருந்த விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன.