மாமல்லபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

மாமல்லபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-08 22:49 GMT
மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தை அடுத்த எச்சூர் ஊராட்சியில் 5 நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக குடிப்பதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று திருக்கழுக்குன்றம்- மாமல்லபுரம் சாலையில் எச்சூரில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கு தடையின்றி தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்