பலத்த காற்றுடன் மழை: மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி

ஆரல்வாய்மொழி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் போது, மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-09 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பல இடங்களில் மழையுடன் பலத்த காற்று வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து விழுகின்றன. ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பி அறுந்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது விழுந்ததில் அவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

ஆரல்வாய்மொழியை அடுத்த குமாரபுரம் வடக்கூரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 57), விவசாயி. இவருக்கு சொந்தமான பூந்தோட்டம் கண்ணப்பநல்லூரில் உள்ளது. அதில் பிச்சி, முல்லை என பலவகை பூச்செடிகளை பயிரிட்டு இருந்தார்.

துரைராஜ் தினமும் அதிகாலையில் எழுந்து தோட்டத்துக்கு சென்று பூக்களை பறித்து தோவாளை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார். அதன்பின்பு, மீண்டும் தோட்டத்துக்கு சென்று செடிகளுக்கு தண்ணீர் பாய்த்தல், உரமிடுதல் போன்ற பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவார்.

வழக்கம் போல், நேற்று காலையில் பூக்களை சந்தையில் விற்ற பின்பு, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காற்றுடன் சாரல் மழை பெய்தது.

இவரது தோட்டத்தின் மேல் பகுதி வழியாக உயரழுத்த மின்கம்பி செல்கிறது. திடீரென காற்றில் ஒரு மின்கம்பி அறுந்து துரைராஜ் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கும், ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசார், துரைராஜின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த துரைராஜுக்கு, சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்