ஆம்பூரில் சரக்கு ஆட்டோ மீது சொகுசு பஸ் மோதல்; சிறுமி பலி

ஆம்பூரில் சரக்கு ஆட்டோ மீது சொகுசு பஸ் மோதியதில் சிறுமி பலியானாள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-06-09 23:00 GMT
ஆம்பூர்,

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 36), அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் கீர்த்திஷா (7), அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று தண்டபாணி குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிம்மனபுத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான முனீஸ்வரர் கோவிலுக்கு சரக்கு ஆட்டோவில் வந்தனர்.

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே சரக்கு ஆட்டோ வந்தபோது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ் திடீரென மோதியது. இதில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிறுமி கீர்த்திஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த வசந்தா (28), கண்ணன் (56), பாவனா (10), ரேவதி (14), ஸ்ரீராமச்சந்திரன் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்