‘புதுவை மக்களின் வளர்ச்சிக்கு என்னை அர்ப்பணித்துள்ளேன்’ பிறந்தநாளில் கவர்னர் கிரண்பெடி உருக்கம்

தனது பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி கவர்னர் கிரண்பெடி கொண்டாடினார். அப்போது அவர், ‘புதுவை மக்களின் வளர்ச்சிக்கு என்னை அர்ப்பணித்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Update: 2018-06-09 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தனது 69-வது பிறந்தநாளை கவர்னர் மாளிகையில் நேற்று கொண்டாடினார். இதனையொட்டி அங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் ‘கேக்’ வெட்டி தனது பிறந்தநாளை கிரண்பெடி கொண்டாடினார்.

புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடிக்கு பொன்னாடைகள் அணிவித்தும், பூங்கொத்துக்கள் வழங்கியும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அரசு அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு வாழ்த்து கூற வந்த சிறுவனை கவர்னர் தனது இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார்.

பின்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிறந்தநாள் என்பது நம்மை பெற்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். பிறந்த தினம், என்பதைவிட அன்று நமது அன்னைக்கு மறுபிறவி கிடைத்தது என்பதே சரி. புதுச்சேரி வளர்ச்சி, நீர்வளம், விவசாயம், கல்வி, சட்டம் ஒழுங்கு சீரமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே எனது பணியாக கருதுகிறேன். என் மீதான அன்பின் காரணமாக புதுச்சேரியை நேசிக்கிறேன். புதுச்சேரி மிகமிக உன்னதமான இடம். இங்கு எந்த ஒரு திட்டத்தையும் எளிதில் சாதிக்க முடியும். புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு என்னை அர்ப்பணித்துள்ளேன். நான் கவர்னராக பொறுப்பேற்ற போது செழுமையான, வளமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது மனதில் உதித்தது. புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு என்னுடைய பங்கு இருக்கும். என்னுடைய பணிக்கு ஆண்டவன் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்