கும்பகோணம் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து குத்துவிளக்கு பட்டறை தொழிலாளி கொலை

கும்பகோணம் அருகே கழுத்தை அறுத்து குத்துவிளக்கு பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-10 23:15 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அருளானந்தபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருமைநாதன். இவருடைய மகன் ஜெயசீலன்(வயது26). இவர் நாச்சியார்கோவிலில் உள்ள குத்துவிளக்கு பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெயசீலன் தனது தங்கைக்கு செல்போனில் பேசிக்கொண்டே அருளானந்தபுரம் மெயின்ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போனில் ஜெயசீலன் அலறல் சத்தம் கேட்டதால் எதிர்முனையில் இருந்த தங்கை அதிர்ச்சி அடைந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அருமைநாதன் மற்றும் உறவினர்கள் அருளானந்தபுரம் மெயின்ரோட்டிற்கு ஓடி வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இருந்த வாய்க்காலில் ஜெயசீலன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அருமைநாதன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயசீலன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது கொலையாளிகளை கைது செய்யக் கோரி நாச்சியார்கோவில்-நன்னிலம் சாலையில் ஜெயசீலன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்