தண்டராம்பட்டு அருகே பரபரப்பு: திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலிக்கு மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம், வாலிபர் கைது

தண்டராம்பட்டு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2018-06-10 23:00 GMT
தண்டராம்பட்டு, 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது 25). இவரும் 20 வயது நிரம்பிய இளம்பெண்ணும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் முகமது வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதனால் இருவரும் போனில் பேசி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் இளம்பெண் குறித்து முகமதுவிடம் அவருடைய உறவினர்கள் தவறாக கூறி உள்ளனர். இதனால் அவர் நிச்சயிக்கப்பட்ட தனது காதலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த மே மாதம் 10-ந் தேதி வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய முகமது அவரது காதலி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் சம்பவத்தன்று காதலியின் வீட்டிற்கு வந்த முகமது, குடிநீரில் மயக்க மருந்து கலந்து காதலிக்கு கொடுத்து உள்ளார். அதை குடித்த இளம்பெண் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவரை, முகமது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்