தி.மு.க. ஆட்சியில் தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்கியது - ஜெகத்ரட்சகன் பேச்சு

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்கியதாக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் பேசினார்.

Update: 2018-06-10 22:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சக்கரை முன்னிலை வைத்தார். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் எருமனந்தாங்கல் சேகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :–

தற்போது முதல்–அமைச்சராக இருப்பவருக்கு கம்ப ராமாயணத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. சேக்கிழார் எழுதியதாக கூறுகிறார். இதனை வைத்து தமிழ் எதை நோக்கி செல்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது தமிழ் உணர்வை கட்டி காப்பாற்றி வந்தார். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. குறிப்பாக கல்வியின் தரம் தமிழகத்தில் பின்னோக்கி செல்கின்றது. தி.மு.க. ஆட்சியின்போது உயர்கல்வியின் தரம் மிகவும் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர்களே சிறைக்கு செல்லும் நிலைமை உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் தமிழக மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு தோல்வி அடைகின்றனர். எப்போது தேர்தல் வைத்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு வருவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்