குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-06-10 23:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையுடன் அவ்வப்போது சூறாவளி காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன் மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த துரைராஜ், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பலியானார். இந்தநிலையில், நேற்று அறுந்து கிடந்த மின்கம்பியால் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்த விவரம் வருமாறு:-

நித்திரவிளை அருகே உள்ள செம்மான்விளை, வாழப்பறம் வீடு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (வயது 67), கூலி தொழிலாளி. இவர் தினமும் அதிகாலையில் செம்மான்விளை சந்திப்புக்கு சென்று பால் வாங்கி வருவது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை 5 மணியளவில் எழுந்து பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதில் ஒரு மின்கம்பி அறுந்து சாலையின் குறுக்காக விழுந்து கிடந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற பாலையன், கவனிக்காமல் மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே பால் வாங்க சென்றவர் திரும்பி வராததால் அவரது மனைவி விலாசினி, பாலையனை தேடி சென்றார். அப்போது, அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சூரியகோடு மின்வாரிய அலுவலகத்துக்கும், நித்திரவிளை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து, பாலையன் உடலை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அருமனை அருகே குழிச்சல், நெடுமங்காலவிளையை சேர்ந்தவர் அகஸ்டின் (36), ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வந்தார். இதற்காக ரப்பர் தோட்டங்களில் சென்று புல் அறுத்து வருவது வழக்கம். அதன்படி, நேற்று அகஸ்டினும், அவரது அண்ணன் பெஞ்சமினும் மோட்டார் சைக்கிளில் புல் அறுக்க சென்றனர். இருவரும் புல் அறுத்துவிட்டு தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் கட்டி வீட்டுக்கு புறப்பட்டனர். அண்ணன் பெஞ்சமின் முதலில் புறப்பட்டு சென்றார். அவரை பின்தொடர்ந்து அகஸ்டின் வந்து கொண்டிருந்தார்.

அந்த பாதை மிகவும் கரடுமுரடாகவும் புற்கள் வளர்ந்தும் காணப்பட்டது. அத்துடன் வண்டியில் புல்கட்டு இருந்ததால் அகஸ்டின் கால்களை தரையில் ஊன்றியபடி மெதுவாக வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பி அறுந்து பாதையில் கிடந்தது. எதிர்பாராத விதமாக மின்கம்பியின் ஒரு பகுதி அகஸ்டினின் கால் மீது பட்டது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

இதற்கிடையே தம்பியை காணவில்லை என அவரது அண்ணன் தேடி சென்றார். அப்போது, அகஸ்டின் மின்சாரம் பாய்ந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த அகஸ்டினுக்கு சகாய மேரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

மேலும் செய்திகள்