கடையம், சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு

கடையம், சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார வாகனத்துக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.

Update: 2018-06-10 21:15 GMT
கடையம், 

கடையம், சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார வாகனத்துக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.

பிரசார வாகனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார வாகன பயணம் கடந்த 8-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த பிரசார வாகனம் நேற்று நெல்லை மாவட்டம் கடையத்திற்கு வந்தது. கடையம் சின்ன தேர் திடலில் கட்சி சார்பில் பிரசார வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

அப்போது மத்திய, மாநில அரசு 150 நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும். சிறு, குறு தொழிலை மேம்படுத்த வேண்டும். இதற்கான வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாய், சாமுவேல் ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகம்மது, மாவட்ட செயற்குழு கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டர்.

சங்கரன்கோவில்

தொடர்ந்து இந்த பிரசார வாகன பயணம் சங்கரன்கோவிலுக்கு சென்றது. தேரடி திடலில் வாகனத்துக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த பிரசாரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசால் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, மாறுபட்ட பொருளாதார கொள்கை ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து உள்ளது.

நீட் தேர்வு என்பது மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் முறையில் உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரிழந்தார். இந்த ஆண்டு 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மோடி ஆட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. இதை மக்களிடம் எடுத்து சொல்வதற்காகத்தான் இந்த பிரசார பயணத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்