கட்-அவுட், பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் அடங்கிய குழுவினை அமைக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவு

கட்-அவுட், பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் அடங்கிய குழுவினை அமைக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

Update: 2018-06-10 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையின் முக்கிய சந்திப்புகள், வீதிகளில் சமீப காலமாக கட்-அவுட்டுகள், பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன. சில கட்-அவுட்டுகள் பொதுமக்களின் முகம் சுழிக்கும் வகையிலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இவை உள்ளன.

இதுகுறித்து கவர்னர் கிரண்பெடிக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்டுகள், பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

கவர்னர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் கட்-அவுட்டுகளை அகற்றி வருகின்றனர். நேற்று காலையிலும் அந்த பணிகள் தொடர்ந்தது.

கட்-அவுட்டுகளை அகற்றும் பணியினை நேற்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். ஒதியஞ்சாலை சந்திப்பு, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை சதுக்கம், நெல்லித்தோப்பு சிக்னல், புஸ்சி வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் நகராட்சி, பொதுப்பணித்துறை, காவல்துறை, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அடங்கிய நடமாடும் குழுவினை அமைக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த குழுவினர் நாள்தோறும் ரோந்து சென்று கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். அதுகுறித்த விவரங்களை நாள்தோறும் சமூக வலை தளத்தில் பதிவிடவும் கேட்டுக்கொண்டார். கட்-அவுட், பேனர்களை அனுமதி பெற்று வைக்க பொதுமக்களை அறிவுறுத்துமாறும், அதுகுறித்த இடங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கவர்னரின் கூடுதல் செயலாளர் ஸ்ரீநிவாஸ், புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சேகர், போலீஸ் சூப்பிரண்டு வெங்கடாசலம், இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்