தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஆவணங்கள் சேகரிப்பு பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்கள் சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2018-06-11 22:15 GMT
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது. 2-வது கட்டமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 3-வதாக இறுதி விசாரணை நடத்தப்படுகிறது.

தற்போது முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். உறுதிபடுத்தப்பட்ட ஆவணம், வழக்கு தொடர்பான உறுதிபடுத்தப்படாத ஆவணங்களும் சேகரிக்கப்படுகிறது. இதற்காக சம்பவம் நடந்த ஒவ்வொரு இடத்திலும் போலீசார் மீண்டும், மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்