கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இது பற்றி துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்காளதேசம் அருகில் உள்ள வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது வங்காளதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடல் காற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றத்துடன் காணப்படும். மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்றார்.