முட்டத்தில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி

முட்டத்தில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-11 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 34), மீனவர். இவரும் மிடாலம், வளனார்காலனியை சேர்ந்த ஜெஸ்டஸ் ஸ்டார், நிசின் ஸ்டார் ஆகியோரும் முட்டத்தில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர்.

கரையின் அருகே வந்ததும் ஜெஸ்டஸ் ஸ்டாரும், நிசின் ஸ்டாரும் படகில் இருந்து இறங்கி கரையேறினர். தினேஷ் படகில் இருந்து வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, தினேஷ் திடீரென மயங்கி கடலுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்ததும் சக மீனவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்