காஞ்சீபுரத்தில் பயங்கரம் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை

குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-06-12 00:16 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஓரிக்கை ராஜன் நகரில் வசித்து வந்தவர் திருமுருகன்(வயது 40). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சங்கரி(35). இவர், ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கோவிந்தவாசன்(17) என்ற மகனும், ராஜேஸ்வரி(15) என்ற மகளும் உள்ளனர்.

கோவிந்தவாசன் கல்லூரியிலும், ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். திருமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமுருகன், குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் கோவிந்தவாசன், ராஜேஸ்வரி இருவரும் வீட்டில் படுத்து தூங்கி விட்டனர்.

ஆனால் நள்ளிரவை தாண்டியும் கணவன்-மனைவி இடையே தகராறு நீடித்தது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது போதையில் இருந்த திருமுருகன், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி மனைவி மீது போட முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரி, கணவரை பிடித்து கீழே தள்ளி விட்டார். இதில் அவர் அம்மிக்கல்லுடன் நிலைதடுமாறி விழுந்தார். ஏற்கனவே குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதால் கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கரி, கீழே கிடந்த அம்மிக்கல்லை எடுத்து, கணவர் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த திருமுருகன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலையான திருமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய மனைவி சங்கரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்