மணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

விராலிமலை, அறந்தாங்கி, காரையூர் பகுதிகளில் மணல் அள்ளிய தாக 11 லாரிகள், 5 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-06-12 23:00 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான அதிகாரிகள் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை, கீரனூர் மற்றும் விராலூர் செல்லும் சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதை யடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அறந்தாங்கி அருகே உள்ள இடையார் பகுதியில் நேற்று அதிகாலை வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் தலைமையிலான அதிகாரிகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா நெய்வத்தளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 5 மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதேபோல காரையூர் அருகே ஆலம்பட்டி பகுதியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்