மதுக்கடையில் நடந்த மோதலில் பிரபல ரவுடி கொற கோபியின் கூட்டாளி அடித்துக்கொலை

ஓசூர் அருகே மதுக் கடையில் நடந்த மோதலில் பிரபல ரவுடி கொற கோபியின் கூட்டாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-06-12 23:15 GMT
ஓசூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் செந்தில் (வயது 35). ரவுடி. இவர் மீது ஓசூர் நூருல்லா கொலை வழக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஓசூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கொற கோபியின் கூட்டாளியான செந்தில், நேற்று முன்தினம் இரவு ஓசூர் சிப்காட்டில் ரிங் ரோட்டில் உள்ள மதுக்கடை ஒன்றிற்கு மது குடிக்க சென்றார். அப்போது மதுக்கடையின் விற்பனையாளர் மதுபாட்டிலை கொடுத்தபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடையின் விற்பனையாளருக்கும், செந்திலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது மதுக்கடையில் இருந்த சிலர் செந்திலை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில், தனது நண்பருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் அங்கு வந்து செந்திலை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செந்தில் இறந்தார்.

இந்த கொலை ஓசூர் உள்வட்டச்சாலையில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் இருக்கும் மதுக்கடையில் நடந்துள்ளது. அந்த மதுக்கடை கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. கொலை பற்றி தகவல் அறிந்ததும் அத்திப்பள்ளி போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கொலையுண்ட செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். 

மேலும் செய்திகள்