போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது
சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் அருகில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நேரு நகர், ராஜேந்திர பிரசாத் சாலையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவர், பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.2–ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சிட்லபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் கார்த்திக்கை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அவர், குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கார்த்திக்கை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.