7 வீடுகளில் திருடிய கொள்ளையன் கைது நகை, செல்போன் பறிமுதல்

மணலிபுதுநகர் பகுதியில் 7 வீடுகளில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-14 22:45 GMT
பொன்னேரி,

சென்னையை அடுத்த மணலிபுதுநகர் பகுதியில் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. பூட்டப்பட்ட வீடுகளை கண்காணித்து உள்ளே புகுந்து பணம், நகை, செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

கடந்த மாதங்களில் தொடர்ந்து 7 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. ஆனால் போலீசாரால் திருடனை கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமராவில் ஒரு வாலிபர் வீட்டில் நுழைவது பதிவாகி இருந்தது.

அதனை அடையாளமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த திருடனின் படம் கொடுங்கையூரை சேர்ந்த பழைய குற்றவாளி மாயகண்ணன் என்கிற பாண்டியன் (வயது 36) என்பது தெரியவந்தது.

அவரை பிடிக்க திட்டமிட்டு கண்காணித்தனர். நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

பறிமுதல்

அவரிடம் இருந்து 5 செல்போன்கள், 24 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கொடுங்கையூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் கைவரிசை காட்டிய அவர் தற்போது மணலிபுதுநகர் பகுதியில் முகாமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தை பயன்படுத்தி அந்த நாட்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்