போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் உள்ள வாகன போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

Update: 2018-06-14 23:15 GMT
சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் வாகன போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடிக்கு நேற்று காலை 6 மணி அளவில் 2 கார்களில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈரோட்டில் இருந்து வந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் போக்குவரத்து சோதனைச்சாவடி அலுவலகத்துக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது உள்ளே இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. அதேபோல் வெளியில் இருந்து யாரையும் சோதனைச்சாவடிக்குள் அனுமதிக்கவில்லை.

இதில் வாகன போக்குவரத்து சோதனைச்சாவடி அலுவலகத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தெரிகிறது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் போக்குவரத்து அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தினர். சோதனையை முடித்துவிட்டு பகல் 10.30 மணிஅளவில் அங்கிருந்து சென்று விட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பண்ணாரியில் உள்ள வாகன போக்குவரத்து சோதனைச்சாவடி அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனைச்சாவடி அருகே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்