காதல் விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு சித்தப்பா கைது

காதல் விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-14 22:15 GMT
குளித்தலை,

குளித்தலை அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகள் நந்தினி(வயது 19). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள காக்காதோப்பு பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா ராஜூ வீட்டில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அப்போது ரமேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு ராஜூ எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். இந்த நிலையில் நந்தினியை பெண் பார்க்க ரமேஷ் நேற்று முன்தினம் சுப்பிரமணியபுரத்திற்கு வருவதாக இருந்தது. தனது பேச்சுக்கு நந்தினி செவிசாய்க்க மறுத்த காரணத்தால் கோபமடைந்த ராஜூ தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை நந்தினி மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் நந்தினி மற்றும் ராஜூவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் ராஜூ குளித்தலை அரசு மருத்துவமனையிலும், நந்தினி திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து ராஜூ மீது குளித்தலை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ராஜூவை குளித்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்