போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்த நவநிர் மாண் சேனா எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Update: 2018-06-19 02:58 GMT
புனே,

புனே ஜூன்னார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நவநிர்மாண் சேனாவின் சரத் சோனவானே. சம்பவத்தன்று இவரது ஆதரவாளர் ஒருவரது லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் கோதுமை கொண்டு செல்லப்படுவதாக அங்குள்ள ஆலேபாட்டோ போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

இதுபற்றி அறிந்த சரத் சோனவானே எம்.எல்.ஏ. சப்-இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு பேசி, அந்த லாரியை விடும்படியும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படியும் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் லாரியை விடுவிக்கவில்லை. அவரை சந்தித்தும் பேசவில்ைல. இதனால் ஆத்திரம் அடைந்த சரத் சோனவானே எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரத் சோனவானே எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்