தினம் ஒரு தகவல் : காற்றாலைகளாலும் பாதிப்பு

காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

Update: 2018-06-21 05:02 GMT
2020-ம் ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தித் திறனை 60 கிகா வாட் ஆக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 8 சதவீதம் காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. இதில் தமிழகம் முதலிடத்திலும், மராட்டியம் இரண்டாம் இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பரவலாக பசுமை மின்சாரம் என்று வர்ணிக்கப்பட்டாலும், காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பறவைகள், வவ்வால்கள் என பறக்கும் உயிரினங்கள் காற்றாலை தகட்டில் மோதி இறந்து போகின்றன. இதுபோல் நேரடி மோதலால் ஏற்படும் மரணங்கள் தவிர, காற்றாலைகளால் பல உயிரினங்களின் வாழிடமும் மோசமாக பாதிக்கப்படுகிறது.

காற்றாலைகளை அமைக்கும்போது நில அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், புதிதாக உருவாக்கப்படும் சாலைகள், அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், காற்றாலை சுழலியால் ஏற்படும் ஒலி போன்றவற்றால் பறவைகளின் வாழிடங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர, வலசை போகும் பறவைகள் காற்றாலைகளைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளில் வெகு தூரம் பறந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அப்பறவைகளின் எண்ணிக்கையும் சரிய வாய்ப்புள்ளது. உதாரணமாக, குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் நடத்திய ஆய்வில், காற்றாலைகள் நிறைந்துள்ள இடங்களில் சில பறவைகளின் எண்ணிக்கை, குறைவாகி இருப்பது தெரியவந்தது.

1990-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் அல்டமான்ட் பாஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையைச்சுற்றிய இடத்தில் ஏற்பட்ட கழுகு வகைப் பறவைகளின் திடீர் அதிகப்படி மரணமே இந்த பிரச்சினையை கவனத்துக்குக் கொண்டுவந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக காற்றாலைகளால் ஏற்படும் பறவைகளின் மரணம் குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

ஒரு காற்றாலைச் சுழலியின் மூலம் ஒரு ஆண்டில் ஒன்றிலிருந்து 64 பறவைகள் வரை இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேநேரம் தங்கள் ஆய்வுக் காலத்தில் பறவைகளின் மரணங்களே நிகழாத காற்றாலைகளும் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான ஆய்வுகளில் கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் உள்ளிட்ட இரைகொல்லிப் பறவைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது கவலைக்குரியது, ஏனென்றால், உணவுச்சங்கிலியில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் இந்த இரைகொல்லிப் பறவைகளின் ஆயுட்காலம் அதிகம், அதேநேரம், இவற்றின் எண்ணிக்கையும் பிறப்பு விகிதமும் மிகக் குறைவு. எனவே காற்றாலைகளால் இரைகொல்லிப் பறவைகளின் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், இது இயற்கை சமநிலையை பெரிதாக பாதிக்கும். 

மேலும் செய்திகள்