ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரே குடும்பத்தினர் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-21 23:00 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி கண்ணகி சாலை அருகே உள்ள புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் மற்றும் வீடுகள் கட்டியுள்ளனர். இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஆலங்குடி தாசில்தார் முன்னிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவர், கட்டப்பட்டு வரும் புதிய வீடு போன்ற ஆக்கிரமிப்புகள், ஆலங்குடி பேருராட்சி செயல் அதிகாரி சிவகாமிநாதன், தாசில்தார் ரெத்தினாவதி முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவராஜ் தலைமையில், ஆலங்குடி, கறம்பக்குடி, வடகாடு, கீரமங்கலம், சம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாக முருகேசன் என்பவருடைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகேசன், அவருடைய தாய் அம்புஜம், தங்கை கலா ஆகியோர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அவர்களை தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதில் முருகேசன் மண்எண்ணெயை குடித்து விட்டதால், அவரை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வீடு இடிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்