ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. பெண் அதிகாரி கைது

நவிமும்பையில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஜி.எஸ்.டி. பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-06-28 23:09 GMT
நவிமும்பை,

தானே மாவட்டம் நவிமும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பெண் அதிகாரியாக இருப்பவர் பாரதி கோல்டே(வயது46). இவர் தானேயை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுத்தார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வியாபாரி இது குறித்து தானே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பாரதி கோல்டேயை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வியாபாரியிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து பாரதி கோல்டே நவிமும்பை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் வைத்து வியாபாரியிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை பெற்றபோது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்