பழனி நகராட்சி அலுவலகத்தை மா.கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

பழனி நகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2018-06-28 23:57 GMT
பழனி,

பழனி நகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கந்தசாமி, நகர்க்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் ஜோதிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பழனி நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கான சொத்துவரி 300 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே செலுத்தும்படியும் அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

அத்துடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

எரியாத நிலையில் உள்ள தெருவிளக்குகளை மாற்றிவிட்டு புதிய தெருவிளக்கு களை பொருத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ஆணையர் ஜோதிக்குமார் கோரிக்கைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்