காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு: திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-07-05 22:15 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற ஆஷிகா (வயது 25). திருநங்கையான இவர் துர்கா என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இந்தநிலையில் ஆஷிகாவுக்கும், புதுவையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த வாலிபரிடம் ஆஷிகா வலியுறுத்தினார். இதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆஷிகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


அரியாங்குப்பம் டோல்கேட் சேரன் வீதியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 45). தொழிலாளி. இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். குமாரவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சைபெற்ற நிலையில், குமாரவேல் நேற்று முன்தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்