பேட்டை அருகே பரிதாபம் கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

பேட்டை அருகே கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2018-07-06 21:00 GMT

பேட்டை,

பேட்டை அருகே கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

தச்சு தொழிலாளி

பேட்டையை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர் சீதாராமன். தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு ராகுல் (வயது 4), நவீன் (2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகே கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. தற்போது அந்த கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நவீன், மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தான். இதனை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் கால்வாய் அருகே நவீன் சென்று விட்டான்.

பரிதாப சாவு

அப்போது நவீன் எதிர்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தான். இதில் நவீன் சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டான். இதனை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நவீனை மீட்டு பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தை நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் நவீன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்