பர்கூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை

பர்கூர் வனப்பகுதியில் யானை இறந்து கிடந்தது.

Update: 2018-07-06 22:16 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள காரசோலபாளி பகுதியில் நேற்று பகல் 11 மணி அளவில் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனே அங்கு சென்று பார்த்தார்கள். அங்கு வன ஓடை அருகே ஒரு யானை இறந்து கிடந்தது.

உடனே இதுபற்றி அவர்கள் ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து கால்நடை டாக்டர் அசோகன் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டார்.

பின்னர் அவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘இறந்தது 6 வயதுடைய ஆண் யானை ஆகும். அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் ஜீரணக்கோளாறால் வயிற்று வலி ஏற்பட்டு யானை இறந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும்’ என்றார்.அதைத்தொடர்ந்து யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

மேலும் செய்திகள்