குற்றாலத்தில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியரிடம் தங்க சங்கிலி பறிப்பு

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-07 21:30 GMT

நெல்லை, 

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தனியார் நிறுவன ஊழியர்

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தன்னுடைய நண்பர்களுடன் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு வந்தார்.

நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்தார். தனது நகையை யாரோ பறிப்பதை கண்ட முத்துக்குமார் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். இதனால் அருவிக்கரையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் ஒப்படைப்பு

அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில், தென்காசி அருகே உள்ள வாலியன்பொத்தையை சேர்ந்த சங்கர் மகன் ரகுமான் (35) என்பதும், அவர் நரிக்குறவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர்தான், முத்துக்குமாரிடம் இருந்து சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. உடனே குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர். அவரிடம் இருந்து சங்கிலியை மீட்டனர்.

மேலும் செய்திகள்