அருமனை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் பலி

அருமனை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-07-07 22:45 GMT
அருமனை,

அருமனை அருகே உள்ள கோணத்துவிளையை சேர்ந்தவர் ஸ்டீபன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் காட்வின் (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காட்வின், சாரோட்டை சேர்ந்த தனது நண்பர் வினிஸ் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அருமனையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிளை வினிஸ் ஓட்டினார். காட்வின் பின்னால் அமர்ந்திருந்தார். பனங்கரை பகுதியில் சென்ற போது வினிஸ் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. அப்போது, பின்னால் இருந்த காட்வின் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் காட்வினை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காட்வின் விபத்தில் சிக்கியது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

காட்வினுக்கு, தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் காட்வின் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்