நுழைவுக்கட்டணம் தர மறுப்பு: வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கழக அறைக்கு பூட்டு, பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை

வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் நுழைவுக்கட்டணம் தர கண்டக்டர்கள் மறுத்ததால் போக்குவரத்துக் கழக அறையை பேரூராட்சி அலுவலர்கள் பூட்டினர்.

Update: 2018-07-07 23:00 GMT
வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலையத்தில் நுழைவுவாயில் கட்டும் பணி ரூ.12 லட்சம் மதிப்பில் நடந்து வருகிறது. மேலும் நடைமேடை, கால்வாய் அமைப்பதற்காக அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஒதுக்கப்படாததால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக பஸ் நிலையத்தின் முன்புறம் சிமெண்டு தளம் உடைக்கப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பஸ்களின் அடிப்புறத்தில் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மணல் கொட்டி தற்காலிகமாக பள்ளத்தை சீரமைத்தனர். ஆனால் தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பஸ்சுக்கான நுழைவுக்கட்டணம் தர அரசு பஸ் கண்டக்டர்கள் மறுத்தனர்.

இதையறிந்த பேரூராட்சி அலுவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்துக்கழக அறையை பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் சரவணக்குமார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் கமர்தீன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதையொட்டி பஸ் நுழைவு கட்டணத்தை கண்டக்டர்கள் கட்டினர். பின்னர் பூட்டப்பட்ட போக்குவரத்துக்கழக அறை திறக்கப்பட்டது. மேலும், பஸ் நிலையத்தின் முன்புறம் ஏற்பட்ட பள்ளம் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்