வெள்ளாற்றில் 1½ வயது பெண் குழந்தை பிணம்

கீரப்பாளையம் வெள்ளாற்றில் 1½ வயது பெண் குழந்தை பிணமாக கிடந்தது. இது தொடர்பாக போலீசார். விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2018-07-08 22:00 GMT
புவனகிரி, 

கீரப்பாளையம் வெள்ளாற்றில் நேற்று காலையில் அழுகிய நிலையில் குழந்தை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக புவனகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த குழந்தைக்கு 1½ வயது இருக்கும். பெண் குழந்தை. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த குழந்தை இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை யாரேனும் கடத்தி கொலை செய்து உடலை வெள்ளாற்றில் வீசிச்சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் குழந்தை ஏதேனும் காணாமல் போனதா? என்று அந்த பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்