திருட்டு பழி சுமத்தியதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவிடைமருதூர் அருகே திருட்டு பழி சுமத்தியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-08 22:15 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சிவபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் குருபிரசாத்(வயது18). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே ஒரு தங்க சங்கிலி கேட்பாரற்று கீழே கிடந்தது. இந்த சங்கிலியை எடுத்த குருபிரசாத் ஒரு அடகுக்கடையில் அடகு வைத்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது குழந்தையின் சங்கிலியை காணவில்லை என தேடினார். இதை அறிந்த குருபிரசாத் தனது தாயாரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.

இதனால் குருபிரசாத்தின் பெற்றோர், செல்வராஜ் குடும்பத்தினரிடம் நடந்த விவரங்களை கூறி மகன் அடகு வைத்திருந்த சங்கிலியை மீட்டு செல்வராஜ் குடும்பத்தினரிடம் கொடுத்தனர். குருபிரசாத் தனக்கு திருட்டு பட்டம் சுமத்தி விட்டார்களே என நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று செக்காங்கண்ணி சாலையில் உள்ள வேப்பமரத்தில் குருபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்