மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்கு வீடுகளை கையகப்படுத்த எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம்

மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக வீடுகளை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-08 22:15 GMT

செங்குன்றம்,

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் 3, 4 மற்றும் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதில் 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் அமைக்கப்படுகிறது.

இதற்காக மாதவரம் வட்டம் அ.சி.சி. நகரில் 3 மற்றும் 5-வது வழித்தடம் அமைப்பதற்கு அங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலம், வீடுகள், பொது இடங்களை கையகப்படுத்தும் சட்ட அறிவிப்பை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.


மாதவரம் பால்பண்ணை, அ.சி.சி நகர், மாதவரம் பால்பண்ணை மெயின் கேட், தபால்பெட்டி சந்திப்பு என மூலக்கடை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வரவுள்ளன. இதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளது.

மெட்ரோ ரெயில் பாதைக்காக 200-க்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வீடு மற்றும் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.சி.சி. நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்