பெண் பயணியிடம் ரூ.6 லட்சம் நகைகள் திருடியவர் கைது திருட்டு நகைகளை வாங்கியவரும் சிக்கினார்

பெண் பயணியிடம் ரூ.6 லட்சம் நகைகள் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் திருட்டு நகைகளை வாங்கியவரும் போலீசில் சிக்கியுள்ளார்

Update: 2018-07-08 23:00 GMT
மும்பை, 

பெண் பயணியிடம் ரூ.6 லட்சம் நகைகள் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் திருட்டு நகைகளை வாங்கியவரும் போலீசில் சிக்கியுள்ளார்.

ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு

தானே, பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் கடந்த மாதம் 18-ந் தேதி மனைவி நேகாவுடன் போரிவிலியில் இருந்து ஆமதாபாத்திற்கு பயணம் செய்வதற்காக ரெயில் நிலையத்திற்குவந்தார். பின்னர் மனைவியுடன் அங்கிருந்த ரெயிலில் ஏறி அமர்ந்திருந்தார்.

அந்த ரெயில் புறப்படுவதற்கு முன் திடீரென மர்ம ஆசாமிஒருவர் ரெயிலில் ஏறி, நேகாவின் கைப்பையில் இருந்து ரூ.6 லட்சம் தங்கம், வைர நகைகளை திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போரிவிலி ரெயில்வே போலீசார் ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

2 பேர் கைது

இதில் சம்பவத்தன்று ஸ்ரீகாந்த் என்பவர் சந்தேகத்திற்கு இடமாக ரெயில்நிலையத்தில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் நேகாவிடம் இருந்து நகைகளை திருடியதும், அதை அவர் சூரத்தை சேர்ந்த நகை வியாபாரி ரமேஷிடம் (60) விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 90 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்